சென்னை: காலஞ்சென்ற நடிகர் விவேக்குக்கு (படம்) வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
"விவேக் ஒரு நடிகராக இருந்தாலும் சமூகம் மீது அக்கறை உடையவர். இயற்கையின் பாதுகாவலராக விளங்கினார். எனவே, அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று அமைச்சரும் பிரதமரும் தீவிரமாக யோசித்து வருகின்றனர்.
"இது குறித்து விரைவில் ஒரு திட்டத்தை தயார் செய்யுங்கள்," என்று அமைச்சரிடம் பிரதமர் கூறியுள்ளார். இதையடுத்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இரண்டு திட்டங்களுடன் தயாராக உள்ளார். சென்னையில் உள்ள 'ஆல் இந்தியா ரேடியோ' கட்டடத்திற்கு விவேக் பெயரை வைக்கலாம் அல்லது விவேக் படம் போட்ட தபால் அஞ்சல் வெளியிடலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
இந்த இரண்டில் தபால் அஞ்சல் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்து விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தத் தகவலை மத்திய அரசு இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

