சென்னை: தனியார் மருத்துவ மனைகள், உணவகங்களும் கொரோனா சிகிச்சை மையங்களைத் தொடங்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்தது.
சென்னையிலும் தொற்று அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என்றும் அதற்காக மாநகராட்சியிடம் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி வெளியிட்ட தகவல் குறிப்பிட்டது.
தமிழகம் முழுக்க கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தலைநகரான சென்னையில் அதிக அளவிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் மருத்துவமனைகள் தவிர்த்து ஏராளமான கல்வி நிலையங்கள், சமுதாயக் கூடங்கள் கொரோனா மையமாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் தனியாரும் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம். சென்னையில் தனியார் ஹோட்டல்கள் மருத்துவமனைகள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொரோனா மையம் தொடங்கலாம். கொரோனா சிகிச்சை மையம் தொடங்குவது குறித்து மாநகராட்சி அதிகாரிக்கு மின்அஞ்சல் அனுப்பினால் போதுமானது என்று கூறியுள்ளார்.

