நாகப்பட்டினம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் நாகை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான ஆளூர் ஷாநவாசுக்குக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
திமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், "தமிழகத்தில் தாமரை மலர பணியாற்றிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் கட்சியின் உண்மை தொண்டர்களுக்கும் கூட்டணி நிர்வாகிகளுக்கும் வெற்றிப் பரிசாக ஆளூர் ஷாநவாஸ் மரணச் செய்தி விரைவில் வரும் என நினைக்கிறேன்," என பாஜக இளைஞரணி தஞ்சை தெற்கு என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, அப்பதிவை வெளியிட்ட அன்பரசன் என்பவரை போலிஸ் கைது செய்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.