சென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேபோல் தாதியர்களும் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது. மேலும், பணியின்போது தமிழகத்தில் மட்டும் இதுவரை 43 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
"கடந்த ஓராண்டாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றும் அரும் பணியில் மருத்துவர்களும் செவிலியர்களும் இதர பணியாளர்களும் ஈடுட்டுள்ளனர். தமது உயிரைத் துச்சம் என மதித்து களப்பணியாற்றிய சில மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்துள்ளனர்.
"இது ஈடுசெய்ய முடியாத பெரும் தியாகம் என்பதை உணர்ந்து அம்மருத்துவரின் குடும்பத்தாருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
கொரோனா சிகிச்சை, அது சார்ந்த பணிகளில் மேலும் பலர் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பட்ட அவர், அவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார்.
கடந்த ஏப்ரல் மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு மருத்துவர்கள் ரூ.30 ஆயிரம், தாதியர் 20 ஆயிரம் ரூபாயும் இதர பணியாளர்கள் 15 ஆயிரம் ரூபாயும் பயிற்சி மருத்துவர்கள் 20 ஆயிரம் ரூபாயும் ஊக்கத்தொகையாக பெறுவர்.

