தூத்துக்குடி: கொவிட்-19 இரண்டாவது அலையால் தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க முடியாமல் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளன. பல மருத்துவமனைகளில் நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பேரில் தமிழக அரசும் அதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தலைமையிலான 9 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் புதன்கிழமை இரவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.
ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன், கொள்கலன்களில் நிரப்பப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பும் பணி நேற்றுக் காலை தொடங்கியது.
இந்நிலையில், ஐந்து டன் ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனையின் உயிர்வளிச் சேமிப்புக் கிடங்கில் நிரப்பப்பட்டது.
கண்காணிப்புக்குழுத் தலைவரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ் ஆக்சிஜன் விநியோகத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

