சென்னை: சாலைப் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், சாலையைப் புதுப்பிக்க அதன் மட்டத்தை உயர்த்தக்கூடாது. சாலையின் மேற்பரப்பை சுரண்டி எடுத்துவிட்டுத்தான் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு (படம்) அறிவுறுத்தியுள்ளார்.
மேம்பாட்டுப்பணி என்ற பெயரில் சாலைகளின் மட்டத்தை உயர்த்திக்கொண்டே சென்றால் சாலைகள் உயர்ந்து வீடுகள் தாழ்ந்துவிடும்.
இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்ட வேண்டுமெனில், இனி சாலை மேம்பாட்டுப் பணிகளால் சாலைகள் உயர்த்தப்படுவது தடுக்கப்படவேண்டும் என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், சாலை மேம்பாட்டுப் பணியின்போது முன்பிருந்தவற்றை சுரண்டி எடுத்துவிட்டு பின்புதான் புதிய சாலைகள் இடுவார்கள்.
காலப்போக்கில் இந்த வழக்கம் மாறிவிட்டது. ஏற்கெனவே உள்ள சாலைகள் மேலேயே புதிதாக ஓர் அடுக்கு சாலையை அமைத்து விடுகின்றனர்.
சாலைகளின் மட்டத்தைக் கண்மூடித்தனமாக உயர்த்திக்கொண்டே செல்வதைத் தடுக்கும் நோக்கில், இதுபற்றி நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிக்கை ஒன்றை தலைமைச் செயலர் இறையன்பு அனுப்பியுள்ளார்.
"மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சாலைகள் ஏற்கெனவே இரண்டு அல்லது மூன்று அடுக்கு அடர்தளம் இடப்பட்டிருக்கும். எனவே, இன்னோர் அடுக்கு அடர்தளமிட்டுச் சாலை மட்டத்தை உயர்த்த வேண்டியதில்லை.
"எனவே, நெடுஞ்சாலைத் துறை மூலமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகள் மேற்கொள்ளும்போது, சாலைகளின் மேற்பரப்பைச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் அமைக்கும் வகையிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
"மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதி சாலைகள் ஏற்கெனவே போதுமான கனத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளதால் பிபிடி சோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை.
"எந்தச் சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக் கூடாது.
"சாலைகளின் மேல்தளக் கட்டுமானத்தை மட்டும் தேவைப்படும் கனத்துக்குச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவு மேற்தளம் இட வேண்டும்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் தலைமைச் செயலர் இறையன்பு.

