சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 பரவல் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவதையடுத்து, கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கும் விதமாக பள்ளிகளில் மருத்துவ முகாம்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது.
அதற்கேதுவாக, முகாம்களை ஏற்படுத்த தயார்நிலையில் பள்ளிகளை வைத்திருக்கும்படி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அவ்வகையில் சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டிலும் சென்னையில் 66 பள்ளிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. பயன்பாட்டுக்குப் பிறகு அதே வசதிகளுடன் பூட்டி வைக்கப்பட்டுள்ள அம்மையங்களை மீண்டும் திறந்து, கடந்த ஆண்டைப் போலவே சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிப் பகுதிக்குள் வரும் பெரிய பள்ளிகள் அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அது குறித்து விரைவில் மாநகராட்சி ஆணையருடன் கலந்தாலோசித்து, பள்ளிகளில் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி, கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்து வருகிறது.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இருநூறாயிரத்தை நெருங்குகிறது
இதனிடையே, தமிழகத்தில் நேற்று முன்தினம் புதிதாக 31,892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. அத்தொற்றால் மேலும் 288 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,531,377ஆக உயர்ந்தது. அவர்களில் 1,318,982 பேர் தொற்றிலிருந்து தேறிவிட்டனர்; 17,056 பேர் மாண்டுபோயினர். கிருமித்தொற்றுக்காக மருத்துவமனைகளில் இன்னும் 195,339 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் முழு ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில், அதனால் கிருமித்தொற்று குறையுமா என இப்போதே கணிக்க இயலாது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதே வேளையில், கொரோனா தடுப்பூசி மையங்களில் கூட்டம் நிரம்பி வழிவதாகச் சொல்லப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 7 மணிவரை 52,730 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதற்கு முதல்நாள் வியாழக்கிழமையன்று 92,732 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கட்டளை மையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கில் சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்ககத்தில் கட்டளை மையம் (war room) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான உயிர்வளி வசதியுடன் கூடிய படுக்கை, செயற்கை சுவாசக் கருவி, ரெம்டெசிவிர் மருந்து போன்ற வசதிகளை இம்மையம் ஒருங்கிணைக்கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் இம்மையத்திற்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, பங்கஜம் என்பவரிடம் இருந்து '104' அழைப்பு எண்ணுக்கு வந்த அழைப்பை எடுத்துப் பேசிய முதல்வர், அவரது தேவையைப் பதிவுசெய்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கை வசதி வழங்க உத்தரவிட்டார்.
அதன்பின் மையத்திற்கு வரும் அனைத்து அழைப்புகளுக்கும் முறையான உதவியையும் ஆலோசனையையும் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

