சென்னை: தமிழகத்தில் 24ஆம் தேதி காலைவரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றுக் காலையில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, தனியாக இயங்கும் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணியில் இருந்து 10 மணிவரை மட்டுமே திறக்கப்பட வேண்டும். மின்வணிக நிறுவனங்களும் காலை 10 மணிக்குள் விநியோகத்தினை முடித்துக்கொள்ள வேண்டும். காய்கனி, பூ விற்கும் நடைபாதைக் கடைகளும் தேநீர்க் கடைகளும் செயல்பட அனுமதி இல்லை.
அத்தியாவசியப் பணிகளுக்காக மாவட்டத்திற்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையிலும் பயணம் செய்ய 'இ-பாஸ்' முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நான்கு மணி நேரத்திற்குள் பொருள்களை வாங்கியாக வேண்டும் என்பதால் சிவகாசிக் கடை வீதிகளில் நேற்றுக் காலையில் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டதாகவும் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் பொதுமக்கள் வீதிகளில் நடமாடியதைக் காண முடிந்ததாகவும் 'தினத்தந்தி' செய்தி கூறியது.
கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றும்படி ஒலிபெருக்கியில் போலிஸ் அறிவித்தபடி இருந்தது.
இன்று தளர்வுகளின்றி முழு முடக்கம் என்பதால் தமிழகத்தின் பல இடங்களிலும் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இதனிடையே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்த குழுவிற்கு ஐவர் கொண்ட 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

