சென்னை: அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் காரணமாக தமிழகத்தில் குமரி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
என்றாலும் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கடுமையான மழை காரணமாக பல ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
தனுஷ்கோடி, பாம்பன் பகுதிகளில் கடல் உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். ராமன்துறை கடற்கரை கிராமங்களில் சூறாவளிக் காற்று வீசியதன் காரணமாக பல வீடுகள் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி இரண்டு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் பல அணைக்கட்டுகளில் நீர்மட்டம் நிரம்பிவிட்டதாகவும் குழித்துறை, தாமிரபரணி, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் பொதுப் பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறின.
பாம்பன் வடக்கு கடற்பகுதியில் நீண்ட தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் ஏராளமான நாட்டுப் படகுகள் தரைதட்டி நிற்கின்றன.
ராமேஸ்வரம் பகுதியிலும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியிலும் பலத்த காற்று வீசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து இருப்பதாகவும் பாலங்கள் உடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, கொச்சி அருகே புயல் காரணமாக கடலில் கவிழ்ந்து விட்ட படகில் இருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 10 மீனவர்களைக் காணவில்லை என்று கவலை தெரிவித்துள்ள உறவினர்கள் அந்த மீனவர்களை உடனடியாக காப்பாற்றும்படி அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
மணிகண்டன் என்பவர் தன் கிராமத்தைச் சேர்ந்த 10 பேருடன் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றதாகவும் புயல் எச்சரிக்கையை அடுத்து வேகமாகக் கரைதிரும்பியபோது படகு புயலில் சிக்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

