ஈரோடு: கொரோனா தொற்று ஏற் பட்டுவிட்டது என்பதால் தன்னைப் பெற்ற தாயையே ஒரு மகள் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
உறவினர்கள், ஊர் மக்கள் தொடத் தயங்கிய அந்த முதிய மாதை செந்தில் என்ற போலிஸ் அதிகாரி ஒருவர் கைத்தாங்கலாக அழைத்தச் சென்று கயிற்றுக் கட்டிலில் படுக்கவைத்தார்.
பொழுது விடிந்ததும் அந்த 60 வயது மாது மருத்துவ வாகனத்தில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் ஈரோடு புஞ்சை புளியம்பட்டியில் இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்தது. அந்த மாதுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கணவர் மரணமடைந்துவிட்டார். முதிய மாது தன் பெண் வீட்டில் வசித்து வந்தார்.
உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றபோது முதிய மாதுக்கு கொரோனா தொற்றி இருப்பது தெரியவந்தது. அவர் அங்கிருந்து புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தன் மகள் வீட்டுக்குச் சென்றார். ஆனால் அவரை வீட்டின் உள்ளேவிட மகள் மறுத்து விட்டார். தெரு ஓரமாக அந்த மாது உட்கார்ந்து கிடந்தார். யாரும் உதவ முன்வரவில்லை. சிலர் அதிகாரி களுக்குச் செய்தி தெரிவித்தனர்.
போலிசார் வந்து அந்த மகளிடம் கெஞ்சி வீட்டின் வெளிப் பக்கத்தில் இரவில் தங்க மட்டும் அந்தத் தாய்க்கு இடம் தரும்படி கேட்டுக்கொண்டனர்.
யாரும் தொட முன்வராத அந்த மாதை போலிஸ் அதிகாரி செந்தில் அழைத்துச் சென்று ஒரு கட்டிலில் படுக்க வைத்தார். அதற்குள்ளாக அந்த மகள் வீட்டின் கதவை சாத்திக்கொண்டு உள்ளே சென்று விட்டார்.

