சென்னை: புதிய கல்விக் கொள்கை தொடர்பில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தது.
அனைத்து மாநிலங்களின் கல்வித்துறைச் செயலாளர்களும் அந்த மெய்நிகர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அக்கோரிக்கை நிராகரிக்கப்படவே, கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
"கல்வி அமைச்சரை ஆலோசனைக்கு அழைக்காமல் துறை அதிகாரியை மத்திய அரசு அழைத்தது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் செயலைக் கண்டிக்கும் விதமாக ஆலோசனையைத் தமிழக அரசு புறக்கணித்தது," என்று அமைச்சர் விளக்கமளித்தார்.
புதிய கல்விக் கொள்கை மூலம் மாநிலங்களில் குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்க மத்திய அரசு முயல்வதாக அவர் செய்தியாளர்களிடம் சொன்னார்.
"புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இருமொழிக் கொள்கையை ஒழித்து, மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உள்ளது. மத்திய அரசுடன் மோதல் போக்குடன் செயல்பட வேண்டும் என்பது எங்களின் நோக்கமில்லை," என்றார் அவர்.
அத்துடன், 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவது குழந்தைகளிடம் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.

