சென்னை: பொது இடங்களில் ஆவிபிடிக்கும் இயந்திரங்களை வைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கொவிட்-19 பரவலைத் தடுக்க உதவும் எனக் கூறி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10 ஆவிபிடிக்கும் இயந்திரங்களை ரயில்வே போலிஸ் வைத்துள்ளது. அதில் துளசி, மஞ்சள், கற்பூரவள்ளி, வேம்பு உள்ளிட்ட மூலிகைகளைப் போட்டு, ஆவி பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் ஓர் இயந்திரத்தில் ஆவிபிடித்த பிறகு அந்த இயந்திரம் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படுகிறது.
பயணிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ஆவிபிடிக்கும் இயந்திரங்கள் படிப்படியாக மற்ற ரயில் நிலையங்களிலும் வைக்கப்படும் என்று ரயில்வே போலிஸ் தெரிவித்துள்ளது.
இதுபோல, கோவையிலும் நீராவி பிடிக்கும் நிலையமும் நடமாடும் நீராவி பிடிக்கும் இயந்திரமும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆவிபிடிப்பதால் கொரோனா தொற்றைத் தடுக்க முடியும் என்பதற்கு அறிவியல்பூர்வமாக எந்தச் சான்றும் இல்லை என்றும் பொது இடங்களில் அதனைச் செய்யும்போது தொற்று பரவவே அதிக வாய்ப்புள்ளது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, பொது இடங்களில் ஆவிபிடிப்பதை ஊக்குவிக்கக்கூடாது என்று தமிழக மருத்துவ, குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி இருக்கிறார்.
"கொரோனா பரவலைத் தடுக்க பொது இடங்களில் மூலிகைகள் கலந்து ஆவிபிடிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பொது இடங்களில் அதனைச் செய்தால் நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்," என்று அவர் கூறினார்.
மேலும், மருத்துவரின் பரிந்துரையின்றி ஆவிபிடிப்பது போன்ற வற்றைச் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

