சென்னை: சளி, காய்ச்சல் இருக்கிறதா என வீடு வீடாகச் சோதனை செய்து வரும் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்ற ஆடவரை அக்கம்பக்கத்தினர் அடித்து உதைத்து போலிசிடம் ஒப்படைத்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்தது.
கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், சென்னை ஏழுகிணறு பகுதியில் அப்பணியை மேற்கொண்டு வந்த 27 வயது இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம் போர்ச்சுகீசிய சர்ச் தெருவில் வசிக்கும் சதக்கத்துல்லா என்பவரின் வீட்டிற்குச் சென்றார்.
அப்போது, வீட்டில் யார் யார் உள்ளனர், எவருக்கேனும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளனவா என சதக்கத்துல்லாவிடம் அப்பெண் கேட்டுள்ளார்.
அதற்கு, தன் மனைவிக்குக் காய்ச்சல் கண்டிருப்பதாகவும் வீட்டிற்குள் வந்து உடல்வெப்பநிலையைப் பரிசோதிக்கும்படியும் அப்பெண்ணிடம் சதக்கத்துல்லா கூறி உள்ளார். அதைத் தொடர்ந்து, அந்த இளம்பெண்ணும் வீட்டிற்குள் சென்றார்.
வீட்டில் வேறு யாரும் உள்ளனரா என்பதைத் தெரிந்துகொள்ளுமுன் கதவைத் தாழிட்ட சதக்கத்துல்லா, பின்னால் இருந்து அப்பெண்ணைக் கட்டிப்பிடித்து, ஆபாசமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், கூச்சலிட்டவாறே வீட்டைவிட்டு வெளியில் ஓடிவந்தார். சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், நடந்ததை அறிந்தபின் சதக்கத்துல்லாவை நையப் புடைத்தனர்.
பின்னர் முன்களப் பணியாளரான அந்த இளம்பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, சதக்கத்துல்லாவை மகளிர் போலிசார் கைது செய்தனர். அவர் மீது மானபங்கம், பாலியல் அத்துமீறல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதான சதக்கத்துல்லாவுக்கு 54 வயது. அவரின் மனைவியும் குழந்தைகளும் வேறு வீட்டில் வசிக்கின்றனராம்.
முன்களப் பணியாளராகப் பணிபுரிந்துவந்த அந்த இளம்பெண், தினமும் அப்பகுதிக்கு வந்து செல்வதை அறிந்த சதக்கத்துல்லா, வீட்டில் யாரும் இல்லாததைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, அப்பெண்ணைத் திட்டுமிட்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்று அத்துமீறியதை ஒத்துக்கொண்டார்.