மதுரை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேற்று மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்குச் சென்று கொரோனா பரவல் தடுப்பு, நிவாரண நடவடிக்கைகள் பற்றி நேரடியாக ஆய்வு செய்தார் தமிழக முதல்வர்
மு.க. ஸ்டாலின்.
நேற்று மதுரை தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா தொற்று சிகிச்சை மையத்தை அவர் திறந்து வைத்தார். நேற்று காலை விமானம் மூலம் மதுரைக்குச் சென்ற திரு ஸ்டாலின், கொரோனா தொற்று தடுப்புப் பணிகள் தொடர்பாக மதுரையில் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்றார்.
அதனையடுத்து, காலை 10.50 மணிக்கு தோப்பூருக்குச் சென்ற முதல்வர், அங்குள்ள காசநோய் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த கொரோனா தொற்று சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்து அதனைப் பார்வையிட்டார். அவருக்கு அந்த சிகிச்சை மையம் குறித்து அதிகாரிகளால் விளக்கம் அளிக்கப்பட்டது.
முதல்கட்டமாக, 230 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது என்றும், எஞ்சிய படுக்கைகள் ஓரிரு நாளில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரைக்குச் செல்லும் முதல்வர் அவரது சகோதரர் அழகிரியைச் சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர், சிகிச்சை மைய திறப்புக்குப் பிறகு திருச்சிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். இது அரசுமுறைப் பயணம் என்பதால் வேறு யாரையும் சந்திக்கப்போவதில்லை என முன்பே முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் நகரங்களை நேற்று முன்தினம் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், கோயமுத்தூரில் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மருத்துவ
மனையைத் திறந்து வைத்தார்.
சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் கூடுதலாக 473 படுக்கை வசதிகளோடு அந்த சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் ஏற்கெனவே இரண்டு கொரோனா சிகிச்சை மையங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.