சென்னை: வடசென்னை பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் பார்த்தசாரதி, 84 (படம்), கொரோனா கிருமித் தொற்றால் உயிரிழந்தார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் பார்த்தசாரதி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர், தமது இல்லத்திலேயே சிறிய அளவிலான மருத்துவமனை அமைத்து, ஆரம்ப காலக்கட்டத்தில் 60 பைசா கட்டணத்தில் இருந்து மக்களுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கி, கால மாற்றத்திற்கு ஏற்ப சொற்ப அளவிலான கட்டணத்திலேயே மருத்துவ சேவையை தொடர்ந்தார். அவர் சிகிச்சைக்காக வாங்கிய அதிகபட்ச கட்டணமே 50 ரூபாய்தான் என்கிறார்கள்.
அமெரிக்கா, லண்டன் நாடு
களுக்குச் சென்று மருத்துவம் படித்த அவர், சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 4 தலைமுறை மக்களுக்கு சேவை புரிந்து வந்தார். கிட்டத்தட்ட ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருந்த அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றபோது, அவரிடம் சிகிச்சை பெற்ற ஏராளமான பொதுமக்கள் கூடி கதறி அழுதனர்.

