திருச்சி: தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக, அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக சந்தைகளில் மக்கள் அதிக அளவில் நேற்று திரண்டனர்.
இம்மாதம் 10 முதல் 24ஆம் தேதி வரை பொது ஊரடங்கு நடப்பில் உள்ளது. ஆனாலும், அத்தியாவசியப் பொருள்களை மக்கள் வாங்குவதற்காக காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காரணமாகவே கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இநிலையில், நேற்று முன்தினம் திருச்சிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்துக் கட்சிக் கூட்டம், மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, உரிய முடிவு அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.
இதனால் திருச்சி மக்கள் நேற்று காலை சந்தைகளில் திரண்டனர். அங்கு முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளிகளைக் கடைபிடிப்பது போன்றவற்றை வலியுறுத்துவதற்காக மாநகராட்சி ஊழியர்களும் போலிசாரும் பணியில் ஈடுபட்டனர்.

