திண்டிவனம்: வயதான காலத்தில் தன்னைக் கவனிக்காமல் இருந்த பேரனுக்குத் தான் எழுதிக்கொடுத்த பத்திரப்பதிவை ரத்து செய்யும்படி திண்டிவனம் உதவி ஆட்சியரிடம் 101 வயது முதியவர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன்படி, பலரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் இப்போது பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன், 101. இவர், கடந்த பிப்ரவரி மாதம் திண்டிவனம் உதவி ஆட்சியர் அனு விடம் மனு ஒன்றை அளித்தார்.
அதில், வயதான காலத்தில் என்னைப் பராமரிப்பதற்காக எனக்குச் சொந்தமான 2.25 ஏக்கர் நிலத்தை 2008ல் என் மகன் வழி பேரன் மாசிலாமணிக்கு தான செட்டில்மென்ட் செய்துகொடுத்தேன்.
ஆனால், அவர் என் மீது எந்த அக்கறையும் காட்டி பராமரிக்க வில்லை. வயதான காலத்தில் தனியாக சிரமப்பட்டு வருகிறேன். எனவே, பேரனின் பெயரில் நான் எழுதிய பதிவை ரத்து செய்யவேண்டும் என கேட்டிருந்தார்.
சின்னப்பனின் மகன்கள், மகள் கள் ஆறு பேரிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு சின்னப்பன் எழுதிக் கொடுத்த பத்திரப் பதிவை ரத்து செய்து அனு உத்தரவிட்டார்.

