நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள ‘தி ஃபேமிலி மேன்-2’ இந்தி இணையத் தொடரை இணையத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என தமிழக அமைச்சர் மனோ. தங்கராஜ் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளார்.
அந்த இணையத் தொடர் ஈழத்தமிழர்களை தவறாக சித்திரிப்பதாக மத்திய தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதி உள்ள கடிதம் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ‘தி ஃபேமிலி மேன்-2’ இந்தி இணையத் தொடரில் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் இலங்கையில் ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும் இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
நெடிய ஜனநாயக போராட்டக் களத்தில் ஈழத்தமிழர்களது தியாகங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதுடன் அது எந்த வகையிலும் தமிழ்ப் பண்பாட்டின் பண்புகளைக் கொண்டதாக இல்லை என்று அமைச்சர் மனோ. தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பண்பாட்டை இழிவுபடுத்தும் கருத்துகளைக் கொண்ட இணையத் தொடரை எந்த வகையிலும் ஒளிபரப்புக்கு ஏற்ற மதிப்புகளைக் கொண்டதாக கருத இயலாது என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழ் பேசும் நடிகையான சமந்தாவை பயங்கரவாதியாக காட்சிப்படுத்தி இருப்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடித் தாக்குதல் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற உள்நோக்கமும் விஷமத்தனமான பரப்புரையையும் யாராலும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் மனோ. தங்கராஜ் தமது கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.