சென்னை: தமிழகத்தில் இதுவரை பதவி ஏற்காத 10 புதிய எம்எல்ஏக்களில் 9 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை யுடன் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 11ஆம் தேதி அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள், 31 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 11ஆம் தேதி பதவியேற்க முடியாமல் போன 10 பேரில் ஒன்பது பேருக்கு நேற்று சட்டமன்றத் தலைவா் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
திமுக சார்பில் சிவசங்கர், மதிவேந்தன், காந்திராஜன், வரலட்சுமி, வெங்கடாசலம் ஆகிய ஐவரும் அதிமுக சார்பில் வைத்திலிங்கம், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, இசக்கி சுப்பையா ஆகிய நால்வரும் பதவியேற்றுக்கொண்டனர்.
திமுக எம்.எல்.ஏ. சண்முகையா மட்டும் இன்னும் பதவியேற்கவில்லை.

