சென்னை: தமிழகம் முழுவதும் தளர்வற்ற ஒருவார கால ழுழு ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த உத்தரவை மீறி தேவையின்றி வெளியே சுற்று பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
அத்துடன், இந்த வாகனங்கள் நீதிமன்றம் மூலமாகவே திருப்பித் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலிசார் தீவிரமாகக் கண்காணித்து வருவதால், மக்கள் நடமாட்டத்துடன் எப்போதும் ஒரே இரைச்சலாகவும் பரபரப்பாகவும் காணப்படும் முக்கிய சாலைகள் பலவும் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்நிலையில், புதிதாகப் பதவியேற்ற திமுக அரசு மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், "தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் அதனை ஒழிக்கவேண்டும். ஊரடங்கு நமது நன்மைக்குத்தான் என உணர்ந்து அனைவரும் வீட்டில் இருங்கள்," என்று ஊரடங்கு தொடர்பில் வெளியிட்ட காணொளியில் தெரிவித்துள்ளார்.
"ஊரடங்கு கசப்பு மருந்துதான். ஆனாலும் அருந்தியே ஆகவேண்டும். அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருங்கள் என கெஞ்சி கேட்கிறேன்," என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
மாநிலத்தின் தினசரி காய்கறி மற்றும் பழங்களின் தேவை 18,000 டன் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் 4,380 வாகனங்கள் மூலம் மக்களின் வீடுகளுக்கே சென்று அவற்றை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்தது.
மதுரை மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை 125 வாகனங்களில் தொடங்கியது.
ஒரு பையில் கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி, தேங்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா என 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100க்கு வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. இதற்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.

