புவனேஸ்வர்: கடும் புயலாக உருவெடுத்துள்ள 'யாஸ்', இன்று நண்பகல்வாக்கில் ஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டத்தில் உள்ள தம்ரா துறைமுகம் அருகே கரையைக் கடக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அப்போது, 150-160 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதையடுத்து, ஒடிசாவிலும் மேற்கு வங்கத்திலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 52 குழுக்கள் ஒடிசாவிற்கும் 45 குழுக்கள் மேற்கு வங்கத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன.
ஒடிசாவில் நான்கு மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் 'யாஸ்' புயல் பெரும் சவாலாக உள்ளதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
புயலால் 20 மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என்பதால், அதைச் சமாளிக்கத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

