கோவை: கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் வகையில், "வெளியூரைச் சேர்ந்தோருக்கு எங்கள் ஊருக்குள் நுழைய அனுமதி இல்லை," என்று ராவத்தூர் மக்கள் அறிவிப்புப் பதாகைகளை கட்டி வைத்துள்ளனர்.
சென்னையை அடுத்து கோவை மாவட்டத்திலும் கிருமிப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் பாதிப்பு 4,000 பேரைக் கடந்துள்ள நிலையில், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சூலூர் அருகில் உள்ள ராவத்தூர் கிராம மக்களும் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இங்குள்ள கலைஞர் நகர் குடியிருப்பில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் யாரும் இதுவரை தொற்றால் பாதிக்கப்படவில்லை.
இந்நிலை தொடர்ந்து நீடிக்கும் வகையில், கிராமத்தினர் வெளியூருக்குச் சென்று வர கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதேபோல், வெளியூரைச் சேர்ந்த வர்கள் தங்கள் ஊருக்குள் வரவும் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்பை கிராமத்தின் நுழைவாயிலில் வைத்துள்ள மக்கள், 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் மீறி கிராமத்திற்குள் நுழைபவர்களை எல்லையிலேயே விசாரித்து திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

