சென்னை: சென்னை திருவல்லிக் கேணி அரசு மகப்பேறு மருத்துவ மனையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, அங்கிருந்த 47 குழந்தைகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
அத்துடன், புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக வும் அவர் மேலும் கூறினார்.
திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் மகப்பேறு வார்டு செயல்பட்டு வருகிறது.
இந்த வார்டில் பிரசவித்த தாய்மார்கள் தங்களது குழந்தைகளுடன் சிகிச்சை பெற்று வந்தபோது, நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் அங்கிருந்த மருத்துவர்கள் தங்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறிது நேரத்தில் கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்கிய நிலையில், மருத்துவமனை ஊழி யர்களும் தாதிகளும் துரிதகதியில் செயல்பட்டு தாய்மார்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கூறப்பட்டது.
இதற்கிடையே, அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் சம் பவ இடத்தைப் பார்வையிட்டு, தாய்மார்களுக்கு ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசியபோது, "மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் மருத்துவர்கள் தங்கியிருக்கும் அறையின் குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
"இதன் காரணமாக, குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவிலும் புகைமூட்டம் பரவி உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 குழந்தைகளும் பாதுகாப்பாக வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர். தற்போது புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
"இந்த மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பகுதிகளும் உடனடியாக பழுது பார்க்க உத்தரவிடப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்று தெரிவித்தார்.

