சென்னை: சென்னையில் பாலியல் புகார் தொடர்பில் மற்றொரு ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.
சென்னையில் அடுத்தடுத்து ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருவதும் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதும் பெற்றோரிடையே ஒருவித அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில், பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் புகார் தொடர்பில் கைதானார்.
மக்கள் மத்தியில் இந்த விவ காரம் குறித்த பரபரப்பு அடங்கு வதற்குள் மற்றொரு ஆசிரியரும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.
சென்னை அயனாவரத்தில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர் களுக்கு வணிகவியல் பாடத்தை ஆசிரியர் ஆனந்தன் போதித்து வந்தார்.
இந்நிலையில், அவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து அந்தப் பள்ளியின் குழு ஒன்று நடத்திய விசாரணையில், மாணவி கூறிய புகார் உண்மை என தெரியவந்ததை அடுத்து, ஆசிரியர் ஆனந்தனை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
அத்துடன், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க உள்ள தாகவும் கூறியுள்ளது.
இதற்கிடையே, பாலியல் புகார் தொடர்பில் சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
இணைய வகுப்பில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், 59, கைது செய்யப்பட்டு, ஜூன் 8ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ஒய்.ஜி.பார்த்தசாரதியால் நிறுவப்பட்டது பத்ம சேஷாத்ரி பள்ளி.
"சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தவறு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். எனது தாயார் உருவாக்கிய பள்ளிக்கு எந்தவிதமான தவறான பெயரும் ஏற்படாத வகையில் பள்ளி நிர்வாகம் நடந்து கொள்ளவேண்டும்," என்று பள்ளி நிர்வாகத்தை ஒய்.ஜி.மகேந்திரன் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

