சென்னை: தமிழகத்தில் கிருமித் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒருபுறம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், மற்றொரு புறம் குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
இருப்பினும், தொடர்ந்து மூன்றாவது நாளாக மேற்கு மாவட்டமான கோயம்புத்தூரில் பாதிப்பு அதிகளவில் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 31,079 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் 2,762 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். கோவையில் (3,937), திருப்பூரில் (1,823), ஈரோட்டில் (1,731), திருச்சியில் (1,287), மதுரையில் (1,140), கன்னியாகுமரியில் (1,007) பேரும் இத்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், கவலைக்குரிய விதமாக தமிழகத்தில் ஒரே நாளில் 486 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 22,775 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பெருந்தொற்றில் இருந்து 31,255 பேர் குணம்பெற்று, வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

