சென்னை: 'அதிமுகவை சரிசெய்ய நிச்சயம் வருவேன்' என அதிமுக தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசிய ஒலிப்பதிவு (ஆடியோ) ஒன்று சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதால் ஆட்சியை இழந்தது அதிமுக.
இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழியான சசிகலா (படம்), தொண் டர் ஒருவரிடம் பேசிய ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதில் தொண்டரிடம் சசிகலா, "நல்லா இருக்கீங்களா' என்று கேட்கிறார். அதற்கு அவர் 'நன்றாக இருக்கிறேன். உங்கள் குரலை கேட்டதே பெரிய சந்தோஷம் அம்மா' என்கிறார்.
பின்னர் சசிகலா, 'ஒன்றும் கவலைப்படாதீங்க, கண்டிப்பாக கட்சியைச் சரி பண்ணிடலாம்.. கொரோனா முடிந்தபின் நிச்சயம் நான் வருவேன். எல்லாரும் கவனமாக இருங்க," என்கிறார்.
பின் மற்றொரு ஒலிப்பதிவில், "கட்சி வீணாவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர்கள் சண்டை போடுவது கஷ்டமாக இருக்கிறது. கொரோனா குறைந்த பிறகு கண்டிப்பாக எல்லாரையும் சந்திக்கிறேன்," என்று தொண்டர் ஒருவரிடம் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதியாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்த சசிகலா, விடுதலையாகி வெளியே வந்த பின் அரசியல் சூழல் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது 'மீண்டும் வருவேன்' என்று கூறியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த ஒலிப்பதிவு உண்மையானதா அல்லது சசிகலா போன்று யாராவது பேசி இருக்கிறார்களா என்ற சந்தேகமும் கிளம்பி இருக்கிறது.

