கடந்த 48 நாள்களில் ஆகக் குறைவான பலி எண்ணிக்கை பதிவானது
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
மேலும் நேற்று முன்தினம், கடந்த 48 நாட்களில் ஆகக் குறைவான பலி எண்ணிக்கை பதிவாகி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 152,734 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியது கண்டறியப்பட்ட நிலையில், ஒரேநாளில் சுமார் 270,000 பேர் தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி டெல்லியில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா, ராஜஸ்தான், கோவா, மிசோரம், ஹிமாச்சல் பிரதேஷ், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் ஜூன் முதல் வாரம் வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளன.
ஒடிசாவில் ஜூன் 17 வரையிலும், மேற்கு வங்கத்தில் ஜூன் 15, நாகாலாந்தில் ஜூன் 11, மணிப்பூரில் ஜூன் 11, பஞ்சாபில் ஜூன் 10 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பதிவுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2.26 மில்லியனாக குறைந்துள்ளது.
இந்நிலையில் ஜூலை மாத இறுதிக்குள் 200 முதல் 250 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 37 மாவட்டங்களில் கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்தது
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தியதன் பலனாக கொரோனா தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தொற்று குறைந்து வரும் நேரத்தில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
முழு ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் 37 மாவட்டங்களில் புது நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது எனினும் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் தொற்றுப் பாதிப்பு இன்னும் குறையவில்லை. தமிழகத்தில் நேற்று முன்தினம் 28,864 பேர் புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
கடந்த 24ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி (நேற்று) வரை தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதை வரும் 7ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடமாடும் மளிகைக் கடைகள் நேற்று செயல்படத் தொடங்கின. இதற்கிடையே விரைவு ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு 1,808 மெட்ரிக் டன் உயிர்வாயுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

