புதுடெல்லி: அதிமுக உறுப்பினருடன் சசிகலா பேசுவது போன்ற நான்காவது ஒலிப்பதிவு வெளியாகி உள்ளது. இதனால் அதிமுக வட்டாரங்களில் சலசலப்பு நிலவுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு தீவிர அரசியலில் இருந்து தாம் விலகுவதாக சசிகலா அறிவித்திருந்தார்.
தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியையும் பறிகொடுத்துள்ளது.
இதனால் சசிகலா மீண்டும் அரசியல் களத்துக்கு வருவார் என்றும் அதிமுகவை கைப்பற்றுவார் என்றும் மீண்டும் சில கணிப்புகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் அதிமுகவில் உள்ள தமது ஆதரவாளர்களைத் தொடர்புகொண்டு சசிகலா பேசி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பான மூன்று ஒலிப்பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.
அந்த ஒலிப்பதிவில் இடம்பெற்றுள்ள உரையாடல்களில், கொரோனா நெருக்கடி முடிவுக்கு வந்த பிறகு தாம் அரசியலுக்கு வரப்போவதாகவும் அதிமுகவை காப்பாற்றவேண்டும் என்றும் சசிகலா கூறுவதாக பதிவாகி உள்ளது.
இதையடுத்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எம்எல்ஏவுமான கே.பி. முனுசாமி சசிகலா தரப்பை சாடியுள்ளார். ஆதாயங்களுக்காகவும் அதிகார போதைக்காகவும் சசிகலா தரப்பினர் சில முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள கே.பி.முனுசாமி, சசி தரப்பினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நான்காவது ஒலிப்பதிவு சென்னையைச் சேர்ந்த ராஜா ரகுபதி என்பவருடன் சசிகலா பேசுவதாக அமைந்துள்ளது. ராஜாரகுபதியின் அதிமுக உறுப்பினர் அட்டையையும் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் புதிய ஒலிப்பதிவில், "யாரும் கவலைப்பட வேண்டாம். நான் நிச்சயம் வருவேன். கட்சியைச் சரிசெய்துவிடலாம்," என்று சசிகலா கூறுவதாக அமைந்துள்ளது என தினத்தந்தி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அதிமுகவில் சலசலப்பு நிலவுகிறது.

