புதுடெல்லி: கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அக்குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பாக மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் நாட்டில் 9,436 குழந்தைகள் தாய், தந்தை ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை இழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 1,700 பேர் தாய், தந்தை இருவரையுமே இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது.
பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளை மாநில அரசுகள் உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்றும் இதற்காக மாநில அளவில் உதவி மையங்களை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
தொற்று பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க குழந்தைகள் பராமரிப்பு மையத்திலேயே தனிமைப்படுத்தும் வசதி, குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக மனநல மருத்துவர், ஆலோசனையாளர்கள் ஆகியோரை நியமிக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

