புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் 17 விமானிகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் அனைவரும் ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா விமான நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் ஆவர்.
அனைவருமே கடந்த மே மாதம் இந்தியாவில் தொற்று பாதிப்பு உச்சத்தை அடைந்தபோது உயிரிழந்து விட்டதாக 'நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' சில வட்டாரங்களை மேற்கொள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த 10 பேரும், விஸ்தாரா நிறுவனத்தின் 2 விமானிகளும் இறந்துள்ளனர். அதேபோல் தங்கள் நிறுவனத்தின் 5 மூத்த விமானிகளை இழந்துள்ளதாக ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நிறுவன விமானிகள் இறந்துவிட்டதாக வெளியான தகவல் குறித்து கருத்துத் தெரிவிக்க இண்டிகோ நிறுவனம் முன்வரவில்லை.
எனினும் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 35 ஆயிரம் ஊழியர்களில் 20 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக அந்நிறுவனம் கூறி உள்ளது.
மேலும், தங்களது நிறுவனத்தைச் சேர்ந்த விமானி உயிரிழந்தால் அவரது குடும்பத்தாருக்கு 5 கோடி ரூபாய் கிடைக்கும் வகையில் நலத்திட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா முதல் அலையின்போது இந்நிறுவனத்தைச் சேர்ந்த ஒருசில விமானிகள் மட்டுமே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் இரண்டாவது அலையில் 450 விமானிகளுக்குத் தொற்று ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விஸ்தாரா நிறுவனத்தின் 99 விழுக்காடு ஊழியர்களுக்கும் ஏர் இந்தியாவின் 96 விழுக்காடு ஊழியர்களுக்கும் ஒரு தவணை தடுப்பூசியேனும் போடப்பட்டு விட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
தொடக்கத்தில் பற்றாக்குறை காரணமாக ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் மே 15ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.