சென்னை: தமிழ்நாட்டில் கூலிப்படை தாதா என்று குறிப்பிடப்பட்ட திண்டுக்கல் பாண்டி என்பவரின் வலது கரம் என்று வர்ணிக்கப்படும் சிடி மணிகண்டன்,45, என்ற ரவுடியை இப்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தங்கள் பொறுப்பில் வைத்து போலிசார் விசாரித்து வருகிறார்கள்.
ெசன்னையின் பல்வேறு பகுதி களில் திருட்டு சிடிகளை முன்பு விற்று வந்ததால் சிடி மணி என்று பெயர் பெற்ற இந்த ரவுடி, இம்மாதம் 2ஆம் தேதி போலிசிடம் சிக்கினார்.
அப்போது சிடி மணி துப்பாக்கியால் சுட்டதில் போலிஸ் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். தப்பிச் சென்றபோது மணிக்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் நடத்திய புலன் விசாரணையில் திடுக்கிடும் பல நிலவரங்கள் தெரிய வந்திருப்பதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
சிடி மணி மீது கொலை, கொள்ளை, ஆயுதங்கள் பதுக்கல், தொழில் அதிபர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்தல், போலிசை துப்பாக்கியால் சுட்டது என பல வழக்குகள் உள்ளன.
சிடி மணிக்கு எதிரிகள் அதிகம். ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்பவருடன் சிடி மணி ஒரு காரில் சென்றபோது வெடிகுண்டு வீசி கொலை முயற்சியும் நடந்தது.
உயிர் பயத்தில் இருந்து வந்த சிடி மணி, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள பல கோடிகளைச் செலவு செய்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினார்.
சென்னையில் உள்ள தனது சொகுசு பங்களா முழுவதும் கண்காணிப்பு சாதனங்களைப் பொருத்திவைத்தார்.
பல சொகுசு கார்களை வாங்கியவர் சாலையில் செல்லும்போது தனக்கு முன்னும் பின்னும் துப்பாக்கி ஏந்திய கூட்டாளிகளுடன் வலம் வந்தார்.
ரூ.10 கோடி மதிப்பில் குண்டு துளைக்காத சொகுசு கார் ஒன்றையும் அவர் வாங்கினார். அந்தக் காரை அவர் டெல்லியில் மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதை சென்னைக்கு கொண்டு வர போலிசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிடி மணி துப்பாக்கி தயாரிப்பிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதற்காக மதுரையில் ஒதுக்குப்புறமாக உள்ள பல ஏக்கர் தென்னந்தோப்பை வாங்கி, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளதாக போலிஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் கூறி உள்ளது.

