ஆலங்குளம்: கூட்டம் கூடினால் கிருமிப் பரவல் அதிகரிக்கும் என்பதால், திருமண விழாக்களில் 50 பேருக்கு மேல் கூடக்கூடாது என மாநில அரசு அண்மையில் சில கட்டுப்பாடுகளை விதித் திருந்தது.
இதை மீறும் வகையில் ஆலங்குளத்தில் திருமணம் ஒன்று மிகவும் தடபுடலாக நடந்துள்ளது.
கடந்த ஞாயிறன்று தளர்வற்ற ஊரடங்கு நடப்பில் இருந்த நிலையில் சமூக இடைவெளி, முகக்கவசத்தை மறந்து 500க்கும் மேற்பட்ட உறவினர்கள் புடைசூழ, செண்டைமேளம் முழங்க, யானை மீது அமர்ந்து மாப்பிள்ளை ஊர்வலம் வந்துள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், காசியாபுரத்தைச் சேர்ந்தவர் வியாபாரிகள் நலச் சங்கச் செயலாளர் ஆறுமுக பாண்டியன். இவரது மகன் பாஸ்கரின் திருமணத்துக்கு அரசியல் பிரமுகர்கள் வருவதாக திருமணப் பத்திரிகையில் அச்சிடப்பட்டிருந்தது.
இதனால், அந்தப் பக்கம் போலிசாரோ, அதிகாரிகளோ யாரும் தலைகாட்டவில்லை.
இந்நிலையில், ஆலங்குளத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோதும், திருமணம், விருந்தில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் திரண்டுள்ளனர்.
ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்ட பலர், தொற்றுப் பரவலுக்கு ஆளாகி அவதிக்குள்ளானது தெரிந்திருந்தும் அலட்சியமாக நடந்துகொண்டிருப் பது ஏன் என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த திருமணம் குறித்த காெணாளி சமூக வலைத் தளத்தில் வெளியான நிலையில், நோய்த்தொற்று பரவும் வகையில் ஆடம்பரத் திருமண ஏற்பாடுகளைச் செய்த ஆறுமுக பாண்டியனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.