தடுப்பூசி இணையத்தளத்தில் தமிழ்
சென்னை: கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள 'கோவின்' இணையத்தளத்தில் முன்பதிவு செய்யவேண்டும். இதில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. பின்பு மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டபோது தமிழ் மொழி மட்டும் இணைக்கப்படாமல் இருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'தமிழை யும் சேர்க்குமாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். தற்போது அந்த இணையத்தளத்தில் 12வது மொழியாக தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது.
எடப்பாடிக்கு எதிராக சுவரொட்டி
நெல்லை: நெல்லை மாநகர் முழுவதும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டியால் பரபரப்பு கிளம்பியுள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டு வருவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழில் அர்ச்சனை: கம்யூ. மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அண்மையில் கூறியிருந்தார். அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், "எல்லா சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் சட்டப்படி அடுத்த நூறு நாளில் பணி நியமனம் வழங்கப்படும் எனவும் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப் படும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கூறியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சியோடு வரவேற்கிறது," என்று கூறியுள்ளார்.
மின்னல் தாக்கி மூவர் மரணம்
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேர் காட்டுப்பகுதியிலுள்ள துர்க்கையம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர். மழை பெய்ததால் அவர்கள் அனைவரும் கோயில் வாசல் அருகே நின்றிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் சண்முகசுந்தரவள்ளி, 56, கருப்பசாமி, 16, தங்கமாரியம்மாள், 45, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் காயத்துடன் உயிர்தப்பினர்.
மீண்டும் கீழடி அகழாய்வுப் பணி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நிறுத்தப்பட்டிருந்த 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 29 நாட்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை முதல் 8 பணியாளர்களுடன் அகழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.

