சென்னை: தமிழகத்தில் 36 மாவட்டங்களில் தடுப்பூசி மருந்தின் கையிருப்பு தீர்ந்துவிட்டது. சென்னையில் மட்டும் 1,060 தடுப்பூசி குப்பிகள் இருப்பில் உள்ள நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்திற்குத் தேவையான மருந்தை மத்திய அரசு அனுப்பினால் மட்டுமே இனி தமிழக மக்களுக்குத் தடுப்பூசி போடமுடியும் என்ற சூழல் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், "தடுப்பூசி குறித்து மக்களிடையே உண்மை நிலையைக் கூறுவதுதான் சரியாக இருக்கும்," என்றவர், "முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தாத 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது," எனக் கூறினார்.
இதற்கிடையே, தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்காக முன்கூட்டியே பதிந்துகொண்டிருந்த மக்கள் தடுப்பூசி மையங்களுக்குச் சென்று அங்கு மருந்தில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17,321 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில், இத்தொற்று காரணமாக 405 பேர் பலியாகினர்.
தடுப்பூசியை இரு முறை போட்டுக்கொள்வதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படுவதால் மக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இப்போது நிலவும் தடுப் பூசி தட்டுப்பாட்டால் மீண்டும் கொரோனா அலை வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.
சென்னை: தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் சூழலில், தமிழகத்திற்கு அதிகளவில் தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பிவைக்கும்படி மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலா ளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, ஹைதராபாத்தில் இருந்து 95,120 கோவாக்சின் தடுப்பு மருந்து குப்பிகள் சென்னை வந்தடைந்தன. இதில் 85,000 டோஸ் தடுப்பூசி மாநில அரசின் சுகாதாரத்துறைக்கும், எஞ்சியவை தனியார் மருத்துவ மனைகளுக்கும் வழங்கப்பட்டன.

