எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க அனுமதி இல்லை
புதுடெல்லி: எதிர்வரும் 14ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இடையேயான அதிகாரப் போட்டி மேலும் வலுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 14ஆம் தேதி சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி நிர்வாகிகள் பங்கேற்க அனுமதி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடி வேளையில் அதிகமானோர் கட்சி அலுவலகத்தில் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. மேலும் எம்எல்ஏக்கள் தவிர வேறு யாருக்கும் அலுவலகத்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்களில் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என அண்மையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் எதிர்வரும் கூட்டத்தை அவரது தரப்பு நடத்திக்காட்ட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் மானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். இவற்றில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனால் கடும் கோபம் அடைந்துள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீண்டும் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருப்பது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவையும் பெறுவதுதான் எடப்பாடியின் திட்டம். அதற்கான வியூகம்தான் எம்எல்ஏக்கள் கூட்டம் என்கிறார்கள் பழனிசாமியின் ஆதரவாளர்கள்.

