சென்னை: நீட் தேர்வினால் தமிழகத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து ஆராய உயர்நிலைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில் 9 பேர் இடம்பெற்றுள்ளனர்.
நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் இக்குழு செயல்படும். இந்தக் குழுவினர் அளிக்கும் அறிக்கையின் பேரில் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளைமேற்கொள்ளும் என தெரிகிறது.
மருத்துவப் படிப்பு மாணவ சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வுக்கு தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனும் கோரிக்கையும் பல்வேறு தரப்புகளால் முன்வைக்கப்பட்டன.
நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் உயர்நிலைக்குழு ஒன்றை அமைத்துள்ளது தமிழக அரசு.
இத்தேர்வால் தமிழகத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் எந்த அளவில் இருக்கிறது? இத்தேர்வு காரணமாக மாணவர்கள் எத்தகைய விளைவுகளை எதிர்கொள்கிறார்கள்? எனப் பல்வேறு அம்சங்களை இந்த உயர்நிலைக் குழு ஆராயும்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதல்வரால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவானது உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து தமிழகத்தில் உள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாக்க தேவையான பரிந்துரைகளை ஒருமாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.