சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 தொற்றின் மூன்றாவது அலை வந்தாலும் அதனை சமாளிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் உள்ளன. அதை எண்ணி மக்கள் அச்சம் கொள்ளத் தேவை யில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தடுப்பூசி மருந்துகள் சேமிப்புக் கிடங்குக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, அங்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின்னர் அமைச்சர் செய்தி யாளா்களிடம் பேசியபோது, "அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் உயிர்வாயு வசதியுடன் படுக்கைகள் போடப்பட்டு வருகின்றன.
"அத்துடன், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஏறத்தாழ 50,000 படுக்கைகள் காலியாகவும் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை உயிர்வாயு வசதியுடன் கூடியவை.
"மாநிலத்தில் கொவிட்-19 இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும், எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மூன்றாவது அலையின் பாதிப்பு வரக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்த அலை வராமல் இருப்பதுதான் நல்லது.
"அப்படியே வந்தாலும் அச்சப்படத் தேவையில்லை.
"தற்போது 3 லட்சத்து 65 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன.
"இந்த தடுப்பூசிகள் தேவைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும்.
"அத்துடன், இதுவரை ஆயிரத்து 299 பேருக்கு கறுப்புப் பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன," என்று அவர் கூறியுள்ளார்.

