ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா அருகே 130 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்றரை வயது சிறுவன், எட்டு மணி நேர போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டான்.
ஆக்ரா அருகேயுள்ள தரியாய் என்ற கிராமத்தில் சோட்டேலால் என்பவரின் மகன் சிவா திங்களன்று காலை, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது சிவா, 130 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
சிவாவைத் தேடிய பெற்றோர், ஆழ்துளைக் கிணற்றில் இருந்து அழுகுரல் கேட்க காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆக்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனிராஜ், 30 பேர் கொண்ட மீட்புக் குழுவுடன் விரைந்து வந்தார்.
மீட்புக் குழுவினர் குழிக்குள் முதலில் உயிர்வாயு குழாய்களை அனுப்பியதோடு, சிறுவனின் நிலை அறிய சிறிய காமிரா ஒன்றையும் உள்ளே அனுப்பிவைத்தனர்.
கையை தலைக்கு மேலே அசைத்தபடி சிறுவன் உயிருடன் இருப்பது உறுதியானது.
ராணுவ வீரர்கள் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே மூன்று பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு குழிதோண்டும் பணியில் ஈடுபட்டனர். ராணுவம், தேசியப் பேரிடர், மாநில மீட்புக் குழுவினர் ஒருங்கிணைந்து மீட்புப் பணியில் தீவிரம் காட்டியதால் 90 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது.
இதற்கிடையே, சிறுவன் விழுந்த குழியில் இருந்தே மீட்கவும் முயன்றனர். சிறுவனின் கையில் சுருக்குப் போட்டு அதனை மேலே ஒருவர் பிடித்துக்கொள்ள, மற்ற வீரர்கள் லாவகமாக சிறுவனை மேலே தூக்கி வெளியே கொண்டு வந்தனர். சிவாவை உயிருடன் மீட்ட வீரர்களை அங்கு திரண்டிருந்த கிராம மக்கள் வாழ்த்தியதுடன், ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி. என் குழந்தையை மீண்டும் உயிருடன் பார்த்துவிட்டேன். குழந்தையை மீட்டுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.
சிறுவனின் தந்தை சோட்டேலால்

