நீதிமன்றத் தீர்ப்பால் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு கடும் நெருக்கடி
சென்னை: பாலியல் வழக்கில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்திருந்த பிணை மனு சென்னை உயர் நீதிமன்றத்தால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். அவர் மீது சாந்தினி என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மணிகண்டனுக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாகவும் இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் சாந்தினி தகவல் வெளியிட்டார்.
மேலும் ஒரே வீட்டில் மணிகண்டனுடன் தாம் வாழ்ந்து வந்த நிலையில், முன்பு வாக்குறுதி அளித்தபடி தன்னைத் திருமணம் செய்துகொள்ள அவர் மறுத்துவிட்டதாகவும் சாந்தினி போலிசில் தெரிவித்துள்ளார்.
மணிகண்டனின் வற்புறுத்தல் காரணமாக மூன்று முறை தாம் கருக்கலைப்பு செய்ததாகவும் தற்போது தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள சாந்தினி, சில திரைப்படங்களில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தம் மீதான இந்தப் புகார்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தம்மிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் நடிகை சாந்தினி பொய்ப் புகார்களை அடுக்குவதாக கூறியுள்ளார்.
இதற்கிடையே சாந்தினி அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல், தாக்குதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனால் தம்மைக் கைது செய்ய வாய்ப்பிருப்பதாகக் கருதிய மணிகண்டன், முன்பிணை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
அவரது இந்த மனுவை எதிர்த்து நடிகை சாந்தினி தரப்பும் மனுத்தாக்கல் செய்திருந்தது. தமது மனுவில் மணிகண்டனுக்குப் பிணை வழங்கக்கூடாது என்றும் தன்னைக் கட்டாயப்படுத்தி மணிகண்டன் கருக்கலைப்பு செய்ததாகவும் சாந்தினி குறிப்பிட்டிருந்தார்.
மணிகண்டனைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரிவித்த காவல்துறையும் பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், மணிகண்டனின் பிணை மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது பிணை மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
இதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எந்த நேரத்திலும் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

