புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து முக்கியப் பொறுப்புகளிலும் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அரசு ஊழியர்கள் அதை 'மகளிர் மட்டும்' மாவட்டம் எனக் குறிப்பிடுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன் பொறுப்பேற்றுள்ளார்.
புதுக்கோட்டை ஆர்டிஓ ஆக அபிநயா, காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக வில்லி கிரேஸ் பொறுப்பில் உள்ளனர்.
காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக கீதாவும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக பூபதியும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக கலைவாணியும் முதன்மைக் கல்வி அலுவலராக விஜயலட்சுமியும் பணியில் உள்ளனர்.
இதனால் புதுக்கோட்டை பெண்களின் கோட்டையாக மாறி உள்ளது என்று கூறப்படும் நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் ஆண்களே எம்எல்ஏக்களாக உள்ளனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கவிதா ராமு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

