சேலம்: 'யூடியூப்' மூலம் பிரபலம் அடைந்த மதன் என்ற இளையருக்கு போலிசார் வலை வீசி உள்ளனர்.
இவர் இணைய விளையாட்டுகளை எப்படி ஆட வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதாகக் கூறி ஏராளமான சிறுமியருடன் ஆபாசமாகப் பேசி வந்துள்ளார். மேலும் சிலரிடம் பணம் பறித்து மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
சேலத்தைச் சேர்ந்த மதன், சிறுமிகளை மட்டுமே குறிவைத்து செயல்பட்டுள்ளார். இவர் ஆபாசமாகப் பேசுவதை சில சிறுமிகள் ரசித்ததாகக் கூறப்படுகிறது. சில சிறுமிகளுக்கு அவரது பேச்சு பிடிக்கவில்லை என்றாலும் இணைய விளையாட்டு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மௌனம் காத்துள்ளனர்.
இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மதன் மீது காவல்துறையில் புகார் அளித்தார். அதுகுறித்து போலிசார் விசாரணை நடத்தியபோது பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விசாரணைக்காக நேரில் முன்னிலையாகும்படி சேலம் போலிசார் அழைப்பாணை அனுப்பியும் மதன் இதுவரை பதில் அளிக்கவில்லை. மேலும் திடீரென தலைமறைவாகி உள்ளார்.
இதையடுத்து சேலம், கிச்சிப்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு போலிசார் சென்றபோது அவர் அங்கு இல்லை. இதனால் அவரது உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
பலரிடம் பணம் பறித்ததாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும் சேலம் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

