25 தலைப்புகளில் 62 பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் 'மெகா' கோரிக்கைப் பட்டியல்
புதுடெல்லி: தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றபின் மு.க. ஸ்டாலின் முதன்முறையாக நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, அவர் 25 தலைப்புகளில் 62 பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியிடம் ஒரு 'மெகா' கோரிக்கை பட்டியலை அளித்தார்.
கூடுதல் தடுப்பூசிகள், ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை முழுமையாக வழங்குதல், 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து, புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறுதல், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தல், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை, கச்சத்தீவு மீட்பு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாகக் கட்டி முடித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பிரதமரைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், "கொவிட்-19 பரவல் காரணமாக முன்கூட்டியே பிரதமரைச் சந்திக்க முடியவில்லை. அவருடனான சந்திப்பு மனநிறைவு தருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார்," என்று சொன்னார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வெகுகாலமாகச் சிறையில் இருக்கும் தமிழர் எழுவரின் விடுதலை குறித்து அதிபரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து முடிவெடுப்போம் என்றும் அவர் கூறினார்.
தேர்தலின்போது திமுக வழங்கிய வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என்ற அவர், மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் ராகுல் காந்தி எம்.பி.யையும் சந்தித்தபின் மாலையில் சென்னை திரும்பினார்.
இதனிடையே, நாளை மறுநாள் காலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவுறும் நிலையில், அதை நீட்டிப்பது தொடர்பில் மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.