திருச்சி: துபாய்க்கு வேலைக்குச் சென்ற பெண் கொவிட்-19 தொற்றால் இறந்துவிட, ரத்த சொந்தங்கள் எவருமின்றி இரு வாரங்களாகத் தவித்து வந்த 11 மாதக் குழந்தை தமிழக அரசின் உதவியால் மீட்டு வரப்பட்டு, தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டான்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் வேலவன் ராஜா - பாரதி தம்பதியர். நிலத்தை விற்றுச் செலவு செய்தும் இவர்களின் மூத்த மகன் விக்னேஷ்வரன், 10, சிறுநீரகப் பிரச்சினை காரணமாகச் சென்ற ஆண்டு இறந்துவிட்டான்.
இதையடுத்து, நிதிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கைக்குழந்தையான தமது மூன்றாவது மகன் தேவேஷுடன் கடந்த மார்ச் மாதம் துபாய்க்கு வேலைக்குச் சென்றார் பாரதி. 2வது மகன் அகிலன், 7, தந்தையுடன் தமிழகத்திலேயே வசித்து வந்தான்.
இந்நிலையில், கடந்த மே 29ஆம் தேதி கொரோனா தொற்றால் பாரதி இறந்துவிட, அங்கேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்தத் துயர நிகழ்வை அறிந்த முதல்வர் ஸ்டாலின், தேவேஷ் தமிழ்நாடு திரும்பத் தேவையான ஏற்பாடுகளை செய்தார். இதையடுத்து, தாயின் அஸ்தியுடன் நேற்று முன்தினம் தேவேஷ் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தான்.
தம் மகன் நாடு திரும்ப உதவிய முதல்வருக்கு நன்றிகூறிக்கொண்ட திரு வேலவன், "அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஆனாலும், என் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தர என்னாலான அனைத்தையும் செய்வேன்," என்றார்.