சேலம்: 'யூ டியூப்' மூலம் ஆபாசமாகப் பேசி லட்சக்கணக்கில் சம்பாதித்ததாகக் கூறப்படும் மதனை போலிசார் கைது செய்துள்ளனர்.
29 வயதான மதன், தன்னைக் கைது செய்ய வேண்டாம் என்று போலிசார் காலில் விழுந்து கதறி அழுதார் என 'தினத்தந்தி' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள இணைய விளையாட்டை ஆடி வந்துள்ளார் மதன். இந்த விளையாட்டில் இணையம் வழி அவருடன் ஏராளமானோர் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் ஆபாசமான கருத்துகளை கூறி, பெண்களை இவர் தரக்குறைவாகப் பேசுவது குறித்து சென்னையைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலிசார் விசாரணை மேற்கொண்டபோது சேலத்தில் இருந்த மதன் தலைமறைவானார். எனவே, 25 வயதான இவரது மனைவி கிருத்திகாவை அவர் பெற்றெடுத்த 8 மாதக் கைக்குழந்தையுடன் போலிசார் கைது செய்தனர். அவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தர்மபுரியில் தமது நண்பர் வீட்டில் தங்கியிருந்த மதனை போலிசார் நேற்று முன்தினம் காலை அதிரடியாகக் கைது செய்தனர். அவர் மேலிட விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் போலிசார் தன்னைக் கைது செய்தபோது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அவர்களது காலில் விழுந்து கதறி அழுதுள்ளார் மதன்.
தாம் தெரியாமல் தவறு செய்துவிட்டதாகக் கூறி கண்ணீர் விட்ட அவரிடம் போலிசார் தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
மதனிடம் இருந்து சொகுசு கார், நான்கு மடிக்கணினிகள், சிறிய ரக ஆளில்லா விமானம் உள்ளிட்ட பொருள்களை போலிசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.75 கோடி பணம் சேர்த்துள்ளதாகவும் 'மாலைமலர்' நாளேடு செய்தி தெரிவிக்கிறது.

