கோவை: பங்ளாதேஷிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பெண் ஒருவர் கோவையில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டார். அந்தப் பெண் உள்ளிட்ட நால்வரை போலிசார் கைது செய்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு கோவை சரவணம்பட்டி மகா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போலிசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் இருந்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த அஜித் மோன், கர்நாடகாவைச் சேர்ந்த மஹந்த்ஷா ஆகிய இருவரும் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்காள மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பங்ளாதேஷ் பெண் ஒருவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்தார்.
அவரை அஜித் மோன் மற்றும் மஹந்த்ஷா வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாக அவர் போசலிசிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலிசார், அஜித்மோன் மற்றும் மஹந்த்ஷா ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி உடனடியாக சிறையில் அடைத்தனர்.
பெண்கள் இருவருரையும் காப்பகத்துக்கு அனுப்ப உத்தரவிட்டனர்.
இருப்பினும் பங்ளாதேஷ் பெண் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததால் அவர் மீது வெளிநாட்டினர் சட்டம் 1946ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
அந்தப் பெண் தொடர்பான தகவலை பங்ளாதேஷ் போலிசாருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச் சகத்துக்கும் போலிசார் அறிக்கை அனுப்பியுள்ளனர்.

