முன்னணி எழுத்தாளர்களின்
படைப்புகளுக்காக ஒரு செயலி
சென்னை: தமிழ் இலக்கியத்தில் சத்தமில்லாமல் ஒரு மாறுதல் நிகழ்ந்து வருகிறது. அதுதான் 'பிஞ்' செயலி (Bynge). ஜனரஞ்சக எழுத்துலகின் முன்னணி எழுத்தாளர்களிலிருந்து தீவிர இலக்கியப் புனைகதையாளர்களின் படைப்புகள் வரை இச்செயலியை அலங்கரிக்கின்றன. ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், ஜி.ஆர்.சுரேந்தர்நாத், சாரு நிவேதிதா, பா.ராகவன், எஸ்.செந்தில்குமார், அராத்து, லஷ்மி சரவணகுமார், காஞ்சனா ஜெயதிலகர், சு.தமிழ்ச்செல்வி போன்றோரின் படைப்புகளை இதில் காணலாம். எத்தனை பேர் தங்கள் எழுத்துகளைப் படிக்கிறார்கள், அவர்களின் விமர்சனங்கள் என்னென்ன என்பதையெல்லாம் உடனுக்குடன் எழுத்தாளர்கள் தெரிந்துகொள்ளமுடியும். கல்கி, அண்ணா, சாவி போன்றோரின் படைப்புகளும் படிக்கக் கிடைக்கின்றன. 'பிஞ்' செயலி வருங்காலத்தில் கிண்டில் வெளியீடுபோல் உருவாவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் எழுத்தாளர்கள்.
'தொழில் தர்மத்திற்கான திருக்குறள்'
சென்னை: திருக்குறளைப் பாடமாக அறிமுகம் செய்ய இருக் கிறது சென்னை பல்கலைக்கழகம். இதற்கான அறிவிப்பை துணைவேந்தர் கவுரி வெளியிட்டுள்ளார். 'தொழில் தர்மத் திற்கான திருக்குறள்' என்ற பெயரில் நடப்பு கல்வியாண்டில் பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இள நிலை மாணவர்களுக்குத் திருக்குறள் பாடமாக அறிமுகம் ஆகிறது எனவும் அவரது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
உதவியாளர்களும் ஓடிவிட்டனர்
சென்னை: நடிகை சாந்தினியின் பாலியல் புகார் வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர்களும் தலைமறைவாகியுள்ளனர். தங்களது கைபேசிகளை அணைத்துவிட்டு ஓட்டுநரும் உதவியாளர்களும் தலைமறை வாகிவிட்டனர். மணிகண்டன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இதனால் இரண்டு தனிப்படைகளை அமைத்து மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் அவரை போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஏடிஎம் கொள்ளை; ஒருவர் கொலை
திருவாரூர்: திருவாரூர் அருகே திருத்துறைப்பூண்டி சாலை யில் உள்ள கூடூரில் ஏடிஎம் இயந்திரத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 4 பேர் கொண்ட கும்பல் உடைக்க முயற்சி செய்தது. சப்தம் கேட்டு அருகில் வசித்தவர்கள் ஓடி வந்து அவர்களைப் பிடிக்க முயன்றபோது நடைபெற்ற தாக்குதலில் தமிழரசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து வந்த தாலுகா போலிசார் நடத்திய விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது வடபாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த மதன், 18, பிரதாப், 19, ஆகாஷ்,20, விஜய்,19, ஆகியோர் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

