பெங்களூரு: திரைப்பட நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார் தொடர்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரில் பதுங்கியிருந்த அவரை நேற்று காலை தனிப்படை போலிசார் கைது செய்தனர்.
பெங்களூரில் நண்பர் ஒருவரது பண்ணை வீட்டில் மணிகண்டன் தங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலிசார் அங்கு விரைந்தனர்.
இதைத்தொடர்ந்து, நேற்று காலை அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த போலிசார் மணிகண்டனைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
அதன் பின்னர், உணவகம் ஒன்றில் போலிசார், மணிகண்டனுக்கு காலை உணவை வாங்கிக் கொடுத்தனர். அதைச் சாப்பிட்ட மணிகண்டனை உடனடியாக சென்னைக்கு போலிஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து வந்தார்கள்.
அவருக்கு மருத்துவப் பரிசோ தனை செய்யப்பட்ட பிறகு நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்படுவார் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியது, மிரட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சாந்தினி புகார் அளித்திருந்தார். ஆறு பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், "நடிகை சாந்தினி யார் என்றே தனக்குத் தெரியாது," என்று மணிகண்டன் தெரிவித்திருந்தார்.
கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் வகையில் முன்பிணை கோரிய மணிகண்டனின் மனுவை அண்மையில் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து தலைமறைவான மணிகண்டனை இரு தனிப்படைகள் அமைத்து தேடி வந்த போலிசார் பெங்களூரில் கைது செய்தனர்.

