புதுடெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்களிலும் இனியும் காலம் தாழ்த்தாமல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்த ஆறு மாத கால அவகாசம் கேட்டுள்ளது தமிழக அரசு.
ஆனால், இதற்கு அனுமதி மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், "உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, வேலூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலையும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையும் செப்டம்பர் 15க்குள் நடத்தி முடிக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்றினைக் காரணம் காட்டி தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல," என்று கூறினர்.
வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது, இனியும் மூன்று மாதம் அவகாசம் உள்ளதால், இதற்குப் பிறகும் கால அவகாசம் வழங்கமுடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.
இதற்கிடையே, தமிழக சட்ட சபையின் 16வது சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்ததும் நகர்ப்புற, ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

