சேலம்: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எழுவரை விடுதலை செய்வது தொடர்பாக சட்டமன்றத்தில் திமுக தீர்மானம் கொண்டு வந்தால் அதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
"குற்றவாளிகளைக் குற்றவாளி களாகத்தான் கருதவேண்டுமே தவிர, அவர்களைப் பரிதாபப்பட்டு விடுவிக்க நினைப்பது மக்கள் மத்தியில் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்," என்று அவர் மேலும் கூறினார்.
கே.எஸ்.அழகிரியின் இந்தக் கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு கட்சிக்குள் விரிசல் ஏற்படும் விதமாக அவர் பேசியுள்ளதாக அரசியல் வட்டாரத்தினர் கூறியுள்ளனர்.
ஏறக்குறைய 29 ஆண்டுகளாக பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தை சிறையிலேயே கழித்து விட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிபரிடம் இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதிபர் அது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், திமுக எடுக்கும் தீர்மானத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

