சென்னை: தளர்வற்ற முழு ஊரடங்கு, தடுப்பூசி போடும் பணி யைத் துரிதப்படுத்தி வருவது போன்ற நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் சற்று ஓய்ந்து வருகிறது.
இதன் காரணமாக, தலைநகர் சென்னையில் இருந்து வெளி மாநிலங்கள், நகரங்களுக்குச் செல்லும் விமானச் சேவைகளும் வெளிமாநிலங்களில் இருந்து சென்னை திரும்பும் விமானச் சேவைகளும் அதிகரித்துள்ளன.
அதேபோல், பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் கூறின.
"நேற்று முன்தினம் ஒரேநாளில் அதிக அளவில் 127 உள்நாட்டு விமானச் சேவைகள் இயக்கப்பட்டன. பயணிகளின் எண்ணிக்கையும் 8,000க்கும் மேல் அதிகரித்தது. இதேபோல், விமானச் சேவைகள், பயணிகளின் எண்ணிக்கை நேற்றும் அதிகமாக இருந்தது," என விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
ஏப்ரல் மாதத்தில் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் கிரு மித் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் விமானப் பயணிகள் எண்ணிக்கை சரிந்ததுடன் விமானங்களின் இயக்கமும் 100க்கு கீழ் குறைந்தது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் டெல்லி, ஹைதராபாத், மும்பை, மதுரை, திருச்சி, கோவை, பெங்களூரு, அந்தமான் தீவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு கூடுதல் விமானங்கள் வந்து சென்றன.
இந்த விமானச் சேவை வரும் வாரங்களில் இன்னும் அதிகரிக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

